Surprise Me!

அமெரிக்க பெண்ணை கரம் பிடித்த கோவை இளைஞர்!

2025-08-29 11 Dailymotion

கோயம்புத்தூர்: கோவையைச் சேர்ந்த இளைஞர் பல ஆன்டுகளாக காதலித்த அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

கோவை, நவஇந்தியா பகுதியை சேர்ந்த மோகன், பிரேமலதா தம்பதியின் மகன் கௌதம். இவர் கனடாவில் பள்ளி மற்றும் கல்லூரி என 11 ஆண்டுகள் பயின்றுள்ளார். இவருடன் கல்லூரியில் பயின்ற அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி பகுதியை சேர்ந்த ராபர்ட் டக்ளஸ் பிராட், எலினிட்டா யசன்யா பிராட் தம்பதியின் மகள் சாரா என்பவரை காதலித்துள்ளார். 

கடந்த 2019-ஆம் ஆண்டு கல்லூரி பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற தங்களது பெற்றோர்களிடம் இருவரும் காதலிப்பதாக கூறி திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளனர். அவர்களது பெற்றோர்கள் மேற்படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியுள்ளனர்.  

இந்த நிலையில் கௌதம் மற்றும் சாராவும் பட்ட மேற்படிப்பை முடித்தவுடன் கனடாவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இருவரின் பெற்றோரும் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். 

மணமகளின் பெற்றோர் இந்திய கலாச்சாரத்தின் மீது மிகுந்த பற்று கொண்டதால், தங்களது மகளுக்கு தமிழ்நாட்டிலேயே திருமணம் செய்ய வேண்டும் என்றும் கௌதமின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு மணமகளின் பெற்றோர், மணமகள் அவர்களது உறவினர்கள் உள்ளிட்ட 15 பேர் கோவைக்கு வந்தனர். திருமணத்திற்கு தேவையான பட்டுப் புடவை மற்றும் பட்டு வேஷ்டிகளை காஞ்சிபுரத்தில் சென்று எடுத்து வந்தனர். மேலும், பத்திரிக்கை அடித்து மணமகனின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.  

இந்த நிலையில், வியாழக்கிழமை (ஆக.28) காலை கோவை கொடீசியா வளாகத்தில் உள்ள அரங்கத்தில் மாங்கல்யம் அணிவித்து, திருமண சடங்குகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த திருமணத்தை மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இது குறித்து மணமகன் கௌதம் கூறுகையில், "வெளிநாட்டில் பிறந்து இருந்தாலும் இந்தியா மற்றும் தமிழ்நாடு அவர்களுக்கு மிகவும் பிடித்ததால் தமிழகத்தில் திருமணம் செய்ய பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்தனர். தமிழர்களின் பண்பாடு பாச பிணைப்பை காட்டுகிறது. இது அவர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. நமது பழக்க வழக்கம் அவர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது"என்றார்.